ஜூலையில் வரும் சுல்தான்!


ரஜினியின் சுல்தான் – தி வாரியர் அனிமேஷன் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முதல் கட்டமாக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்தத் தயாராகி வருகிறார் சௌந்தர்யா ரஜினி.

சுல்தான் படப்பிடிப்பு கடந்த ஓராண்டு காலமாக நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஹைராபாத்தில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் ரஜினி – விஜயலட்சுமி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்தக் காட்சிகள் அனிமேஷனுக்கு மாற்றப்பட்டுவிட்டன. ரஜினியும் வில்லன் ராகுல்தேவும் மோதும் பிரமாண்ட சண்டைக் காட்சிகள் வியட்நாமில் எடுக்கப்பட்டுள்ளன. ரஜினியின் வழக்கமான அறிமுக பாடல் காட்சியொன்றும் இந்தப் படத்தில் உண்டு.

இன்னும் ரஜினி நடிக்க வேண்டிய ஒரு பாடல் மட்டும்தான் பாக்கி உள்ளது.

அடுத்த மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். ஜூலை மாதம் “சுல்தான்” ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சௌந்தர்யா நம்மிடம் கூறியதாவது:

அனிமேஷன் படத்தை அனைத்து தத்ரூபமான காட்சி அமைப்புகளுடன் உருவாக்குவது அத்தனை சாதாரண விஷயமல்ல. அப்பாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் முழு திருப்தி தரும் விதத்தில் இந்தப் படத்தை உருவாக்க வேண்டியுள்ளது. அதனால்தான் இந்தத் தாமதம், என்றார் சௌந்தர்யா.

ஆக்கர் ஸ்டுடியோ படங்களிலிருந்து வார்னர் பிரதர்ஸ் விலகிக்கொண்டதாகக் கூறப்படுவது குறித்து கேட்டோம். அவர் கூறுகையில், கோவா படத்தை மட்டுமே ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்கிறது. மற்ற தமிழ், தெலுங்கு படங்களை வார்னர் பிரதர்ஸுடன் இணைந்தே தயாரிக்கிறோம், என்றார் சௌந்தர்யா.

பின்னூட்டமொன்றை இடுக